
இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். (சங்கீதம் 97:10)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
இரட்சிப்பு நிறைவேற
(புத்தாண்டு 2026 பரிசுத்த வேத தியானம்)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
ஜனவரி 2026
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இரட்சிப்பின் அதிபதி, உலக ரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இணையில்லாத திருநாமத்தில் உங்களுக்கு அன்பின் புத்தாண்டு 2026 வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புதிய ஆண்டின் தேவ செய்திக்குரிய ஆதார வசனம்:
(பிலிப்பியர் 2:12) ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
இது இந்த ஆண்டிற்கான தேவசெய்தி மட்டுமல்ல, நம் வாழ்நாள் முழுவதற்குமான வேத சத்தியம்.
.. அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
(work out your own salvation with fear and trembling)
பரிசுத்த வேத வசனத்தின் இந்தப் பகுதியை நீங்கள் படிக்கும் பொழுது ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.நீங்கள் ஏற்கனவே இரட்சிப்பின் அனுபவத்தை பெற்ற கர்த்தருடைய பிள்ளையாக இருந்தால் அந்த ஆச்சர்யம் உங்களுக்கு நிச்சயம் இருக்கும். நான் இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய பிள்ளையாய் இருக்கிறேனே, வாழ்கிறேனே, இன்னும் என் இரட்சிப்பு நிறைவேற நான் என்ன முயற்சி செய்ய வேண்டும்? நான் என்ன பிரயாசப்பட வேண்டும்? என்ற கேள்வியே அந்த ஆச்சரியத்தின் காரணம்.
தேவனாகிய கர்த்தர் இந்த உலகத்தில் மனிதனைப் படைத்த பொழுது தம்முடைய சாயலில் அவனை ஆவி, ஆத்துமா, சரீரம் என மூன்று பகுதிகளை கொண்டவனாக படைத்தார். ஆவியும் ஆத்துமாவும் அழியாமையை கொண்டவைகள், நித்தியமாக இருக்க கூடியவைகள். நம் உடலோ அழிவுக்குரியது. மண்ணோடு மண்ணாக நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த வேத வசனத்தை, கிறிஸ்து இயேசுவின் அழிவில்லாத ஜீவ வார்த்தையாகிய சுவிசேஷத்தை இரட்சிப்பின் நற்செய்தியாக நாம் கேட்கும் பொழுது பிதாவாகிய தேவனுடைய அன்பினாலே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனித இனத்திற்கு அளிக்கப்பட்ட கிருபையினாலே சிலுவையில் அவர் சிந்தின இரத்தத்தை - இது எனக்காக என நாம் ஒவ்வொருவரும் விசுவாசித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த ரட்சகராக, மீட்பராக, ஆண்டவராக, ஒரே தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிற அந்த இமைப்பொழுதில் மகிமையான இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொள்கிறோம். பிதாவாகிய தேவனுடைய அன்பினாலே கிறிஸ்து இயேசு தம்மை பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து சிலுவையில் மனித குலத்தின் பாவம், சாபம், அதன் விளைவுகள் என எல்லாவற்றையும் தன் மீது ஏற்றுக்கொண்டு பாடுபட்டு ரத்தம் சிந்தி, பாவப் பரிகாரியாக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, அவர் மூலமாக நமக்கு அருளப்பட்ட தேவ கிருபையினாலே இந்த இரட்சிப்பை நமக்குள் செய்து முடித்தார்.
இப்படி இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும்படி அந்த இமைப்பொழுது வரை நாம் செய்த சகல பாவங்களையும், நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அறிக்கை செய்யும் பொழுது அவர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவ கிருபையினாலே அவைகள் முற்றிலும் மன்னிக்கப்பட்டு, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமற நாம் கழுவி சுத்திகரிக்கப்படுகிறோம். நாம் இரட்சிக்கப்படுகிறோம். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறோம்.
இந்த இரட்சிப்பின் அனுபவம் முதலாவது நம்முடைய ஆவியிலே (Spirit) உண்டாகிறது. அதாவது நம்முடைய ஆவி தேவனுடையதாகிறது. தேவனுடைய பரலோக ராஜ்யத்திற்கு உரியதாகிறது. இது ஒரு இமைப் பொழுதில் நமக்குள் நடந்து முடிகிற மகா மேன்மையான, மகிமையான ஒரு ஆவிக்குரிய நிகழ்வு (Instantaneous). இது முழுவதும் நம்முடைய ஆவியில் நடக்கிற ஒரு காரியம். ஆனால் இரட்சிப்பு நிறைவேறுதல் என்பது இந்த உலகத்தில் நாம் வாழும் கடைசி வினாடி வரை ஒவ்வொரு நாளும் நம்மில் நடக்கக்கூடியது (Progressive). நம்முடைய ஆத்துமாவிலும் (Soul), சரீரத்திலும் (Body) நடக்கிறது. அதாவது நம் ஆவி மட்டுமல்ல, நம் ஆத்துமாவும் சரீரமும் சேர்ந்து பூரணமாக இரட்சிக்கப்படும்படி, நித்திய ஜீவனை நாம் பெற்றுக்கொள்ளும்படி ஒவ்வொரு நாளும் நாம் வாழுகிற வாழ்க்கை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒவ்வொரு நாளாக நெருங்கி சேர்கிற, அவருடைய இரண்டாம் வருகைக்கான நம்முடைய ஆயத்தம்.
தேவ கட்டளையின்படி,
(1 பேதுரு 1:15-16) உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.(16) நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) .. நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
(ரோமர் 6:22) இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
சுருக்கமாக சொல்வதானால், தேவ அன்பினால் கிரியைச் செய்கிற விசுவாசத்தினாலே பரிசுத்தமும் நீதியுமான வாழ்க்கையையே தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் இந்த எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்து கிறிஸ்துவுக்குள் முன்னேறி செல்வதே நம்முடைய இரட்சிப்பு நிறைவேறுதல். இதுவே கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு நம்முடைய ஆயத்தம்.
ஒரு மனிதனுக்கு மரணம் சம்பவிக்கும் பொழுது, அவன் ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு திரும்ப செல்லுகிறது. உடல் மண்ணோடு மண்ணாகிறது (பிரசங்கி 12:7 ). ஆத்துமா எங்கே செல்லும்?
இந்த உலக வாழ்க்கையில் இரட்சிப்பை பெற்றுக்கொண்ட பிறகும் மீண்டும் விட்டு வந்த பழைய பாவ, அசுத்த வாழக்கையை வாழும்போது அல்லது இரட்சிப்பு பூரணப்படாமல், நிறைவேறாமல் மரணம் சம்பவித்தால் அல்லது கர்த்தருடைய இரண்டாம் வருகையை எதிர்கொண்டால், என்ன நடக்கும்? தேவனாகிய கர்த்தருடைய நியாயத்தீர்ப்பில் நரக தண்டனை தீர்ப்புக்கு ஆளாக நேரிடும். அப்பொழுது நம் ஆத்துமா, சரீரத்தின் நிலை என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே விளக்கி சொன்ன வசனத்தை கவனிப்போம். நம் இரட்சிப்பு நிறைவேற கவனமாக இருப்போம்.
(மத்தேயு 10:28) ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஆவியும், ஆத்துமாவும் இணைந்த உள்ளான மனிதனுக்கு அழிவில்லாத ஆவிக்குரிய சரீரம் எப்படி கிடைக்கும்? ஆத்தும இரட்சிப்பும், சரீர மீட்பும் (1 கொரிந்தியர் 15:40, பிலிப்பியர் 3:21, ரோமர் 8:23) உண்டாகும்படி ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் கர்த்தருடைய வேதத்தின்படி பரிசுத்தத்தை காத்துக்கொண்டு, என் சுய நீதி அல்ல - கிறிஸ்து இயேசுவே தேவனாலே என் நீதி ஆனார் (1 கொரிந்தியர் 1:31) என்று அவருடைய நீதியின் வழியில் தினமும் நடந்து, நீதியின் கிரியைகளை அதாவது இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று நாம் வாழும் வாழ்க்கையில் நம்மால் ஆன அனைத்து நன்மைகளையும் மற்றவர்களுக்கு செய்து வாழ்வதே நம்முடைய இரட்சிப்பு நிறைவேற நாம் தினமும் செய்கிற முயற்சி. இதுவே வாழ்நாளெல்லாம் நம் வாழ்க்கை முறை. இது வெறும் முயற்சி மட்டுமல்ல, இந்த முயற்சியில் நாம் முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும், ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்குள் நாம் ஜெயங்கொள்ள வேண்டும். நாம் பெற்ற மகிமையான நம்முடைய இரட்சிப்பு முழுமையாக நிறைவேற வேண்டும்.
மரணம் அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாள் வரை நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் குற்றமற்றதாய் நாம் காத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான், என்றென்றும் கர்த்தரோடு அவருடைய ராஜ்யத்தில் வாழும் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும்.
(1 தெசலோனிக்கேயர் 5:23) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
இரட்சிப்பு நிறைவேற என்ன செய்ய வேண்டும்?
பரிசுத்த ஆவியானவர்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் காலகட்டத்தில் வாழுகின்ற நமக்கு நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்வதே நம்முடைய பிரதானமான முதல் தேவை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரை குறித்து நமக்கு வாக்குப் பண்ணி உரைத்திருக்கிறார்:
(யோவேல் 2:28) அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
(அப்போஸ்தலர் 2:33) அவர் (இயேசு) தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ளும்படி, பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பெறும்படி,தேவனாகிய கர்த்தரிடத்தில் பொறுமையோடு தொடந்து வாஞ்சையோடு வேண்டிக்கொண்டு, பெற்றுக்கொள்ளும் வரைக்கும் ஜெபிக்க வேண்டும். நிச்சயம் பெற்றுக்கொள்வோம். கிறிஸ்துவுக்குள் அனுதினமும் பலப்படுத்தப்படுவோம். சந்தேகமேயில்லை.
(click here to expand)
(லூக்கா 11:13) பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
(யோவான் 16:8) அவர் (பரிசுத்த ஆவியானவர்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
(2 கொரிந்தியர் 3:17) கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
(அப்போஸ்தலர் 5:32) ... தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள்.
(யோவான் 14:17) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
(யோவான் 14:26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
(யோவான் 15:26) பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
பரிசுத்த வேத தியானம்: பரிசுத்த வேதத்தை அனுதினமும் ஒரு மணி நேரமாவது வாசிப்பது என்பது முதல் படி என்றாலும், அனுதின பரிசுத்த வேத தியானமே நம் ஆத்துமாவுக்கு மிக அவசியம். காரணம், அதுவே நம் ஆத்துமாவுக்கு உணவு, பெலன், சுத்திகரிப்பு, மகிழ்ச்சி, வெளிச்சம், தேவனைப் பற்றிய அறிவு, சத்திய அறிவு. அப்பொழுது நமக்குள் வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த வேத வசனங்களை கொண்டு நம்மை வழி நடத்துவார். நம்மை உணர்த்துவார். மட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தம் வார்த்தையைக் கொண்டு நம்மோடு பேச, நம்மில் கிரியைச்செய்ய, நம்மை ஆற்றித் தேற்றி நம்மை ஆசீர்வதிக்க இது மிக மிக அவசியம்.
அனுதின ஜெபம்: நம் உலக வாழ்வின் தேவைகளுக்காக மட்டுமல்லாமல், நம் இரட்சிப்பு நிறைவேற நம் ஆவிக்குரிய வாழ்வின் தேவைகளுக்காக, மற்றவர்களுக்காக நாம் அனுதினமும் ஜெபிப்பது என்பது கட்டாயம், அவசியம். நம் இரட்சிப்பு நிறைவேற நாம் அனுதினமும் செய்கிற முயற்சிகளில் வருகிற சறுக்கல்கள், தோல்விகள், சாத்தானின் தாக்குதல்கள், பொல்லாத மனுஷ வல்லமைகள் என இவை எல்லாவற்றையும் மேற்கொள்ள ஜெபமே மிக முக்கியம். ஜெபமே ஜெயம். உபவாச ஜெபம் இன்னும் அடுத்த நிலை மேலான நிலை. சிலவகையான பிரச்சனைகளுக்கு உபவாச ஜெபமே ஒரே தீர்வு.. மட்டுமல்ல தனிப்பட்ட ஜெப வாழ்க்கையில் தேவனாகிய கர்த்தரை துதித்து, ஸ்தோத்தரித்து ஆராதிப்பது என்பது கர்த்தர் தம்முடைய பிள்ளைகளிடத்தில் மிகவும் விரும்பும், எதிர்பார்க்கும் ஒரு காரியம். நம்மிடத்தில் அவர் வந்து உலாவ, நம்மோடு அவர் இடைப்பட இது மிகவும் பாக்கியமான காரியம்.
(சங்கீதம் 22:3) இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
திருவிருந்து: நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, பாவங்கள், குற்றங்குறைகள் நீங்க தேவ சமூகத்தில் அறிக்கை செய்து, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால், ஆவியானவரால் சுத்திகரிக்கப்பட்டு ஆயத்தமாகி, கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவதும் மிக அவசியம்.
(click here to expand)
(1 கொரிந்தியர் 11:23-25) ... கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,(24) ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.(25) போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
(கொலோசெயர் 2:9) ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
(1 கொரிந்தியர் 11:31) நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
சபை ஐக்கியம்: கர்த்தருடைய பிள்ளைகளாகிய அவருடைய விசுவாசிகள், ஊழியர்கள், சீஷர்களின் ஐக்கியமே (Fellowship) கர்த்தருடைய சபை.அது அவருடைய சரீரத்தின் அவயவங்கள். அவருடைய பரிசுத்த வேத சத்தியத்தையே அஸ்திபாரமாக (1 கொரிந்தியர் 3:11), ஆதாரமாகக் கொண்டு தேவனுடைய ஆவியானவராலே கிருபையையும் சத்தியத்தையும் போதிக்கிற உண்மையான கர்த்தருடைய சபையில் ஐக்கியமாய் இருப்பது வேதம் நமக்கு போதிக்கும் சத்தியம். அது நமக்கு அவசியம். ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து வளர, பெலப்பட ஆழமான வேத சத்தியமாகிய பலமான ஆகாரம் நமக்கு சபையிலே கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையின் பல நேரங்களில் சபையில் உள்ள போதகர்கள், ஊழியர்கள் சபையின் மூத்த விசுவாசிகள் ஆகியோரின் வேத ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் நமக்கு தேவைப்படும். மட்டுமல்ல திருச்சபைக்கு என்று தேவன் வைத்திருக்கிற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அவர் முழு சபைக்கும் அருளிச் செய்கிற போது அதில் நாம் நம் பங்கை பெற்றுக்கொள்ள சபையில் ஐக்கியமாய் இருப்பது அவசியம். நினைவில் கொள்வோம், கர்த்தருடைய சபை கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட அவருடைய மணவாட்டி. தம்முடைய சபைக்காக அவர் வைராக்கியங் கொண்டிருக்கிறார். அவரே சபைக்குத் தலையானவர். தம்முடைய சபையை அழைத்துக்கொண்டு செல்லவே அவர் திரும்பவும் வருகிறார் (எபேசியர் 4:11-16).
(click here to expand)
(கொலோசெயர் 1:18) அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
(எபிரெயர் 10:25) சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
(எபேசியர் 4:11-16) மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்,(12) பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,(13) அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.(14) நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,(15) அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.(16) அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
அதே சமயம், ஜாக்கிரதை உள்ளவர்களாக இருந்து, பெயருக்கு சபை என்றிருந்தும் பரிசுத்த வேத சத்தியமல்லாத நவீன புதுமையான, வசனத்தையும் பொய்யையும் கலந்து கலப்படமான வஞ்சக உபதேசங்களை, மனுஷ கற்பனைகளை, வேற்றுமையான உபதேசங்களை போதிக்கிற இடங்களை விட்டு விலகி உங்களை காத்துக் கொள்ளவேண்டும். அனுதின பரிசுத்த வேத தியானத்தின் மூலமாக பரிசுத்த வேத சத்தியத்தை, முழு உண்மையை அறிந்திருந்தால் மட்டுமே பொய்யையும், போலிகளையும், கலப்படங்களையும் அடையாளம் கண்டு விட்டு விலகி நம்மை காத்துக்கொள்ள முடியும். சகல சத்தியத்திலும் நம்மை நடத்துகிற சத்திய ஆவியானவர் நம்மை காத்து நடத்துவார். அவரை பற்றிக்கொள்வோம்.
(click here to expand)
(1 தீமோத்தேயு 1:3) வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், ..
(1 தீமோத்தேயு 6:3-5) ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,(4) அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி (5) கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
நீதியின் கிரியைகள்: என் சுயநீதி அல்ல, கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே என் நீதி என்று விசுவாசித்து நாம் நீதிமான்களாக்கப்படுவது ஒரு பகுதி. நீதிமான்களாக்கப்பட்ட நாம் நீதியின் கிரியைகளை செய்வது மற்றொரு பகுதி. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல இவைகள் இருக்கிறது. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிற நாம், நீதியின் கிரியைகளை செய்ய வேண்டியதும் அவசியம். நீதியின் கிரியைகள்?
(click here to expand)
(ரோமர் 3:21-24) இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.(22) அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.(23) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,(24) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
(எபேசியர் 2:10) ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
(மீகா 6:8) மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
(மத்தேயு 7:12) ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
(லூக்கா 6:35) உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
(ஏசாயா 1:17) நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
(நீதிமொழிகள் 3:27) நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
(நீதிமொழிகள் 3:28) உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
(ரோமர் 13:7) ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.
(கலாத்தியர் 6:10) ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.
(ரோமர் 12:13) பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
(எபிரெயர் 13:2) அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
(எபிரெயர் 13:16) அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
(ஏசாயா 45:8) வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.
இந்த நீதியின் கிரியைகளை நீதியின் கனி என்றும் பரிசுத்த வேதம் அழைக்கிறது:
(யாக்கோபு 3:18) நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
(பிலிப்பியர் 1:10-11) தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
இந்த வேத சத்தியத்தை அறிந்துகொண்ட நாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு அனுதினமும் முயற்சி செய்து முன்னேறி செல்லும் போது, சமாதானத்தின் தேவன் தாமே உங்களுக்கு கிருபை செய்து தம்முடைய வருகை வரையிலும் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை குற்றமற்றதாய் காத்துக் கொள்வாராக. உங்கள் இரட்சிப்பு நிறைவேற , பூரணப்பட கிருபை செய்வாராக. தம்முடைய வருகையிலே எடுத்துக் கொண்டு தம்முடைய ராஜ்யம் கொண்டு சேர்ப்பாராக. ஆமென்.
கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே, தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே நேற்றும் இன்றும் என்றுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. சத்திய ஆவியாகிய தேற்றரவாளனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
மாரநாதா, கர்த்தர் வருகிறார்!
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)
