இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
தொட்டுப்பாருங்கள் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; .... (லூக்கா 24:39) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மனுக்குலத்தின் பாவங்களை, சாபங்களை, வியாதிகளை தன் மீது சுமந்து தீர்த்து பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் உலக மக்கள் யாவருக்கும் அருளும்படியாய், பிதாவாகிய தேவனுடைய உன்னத அன்பின் உறவில் மனிதனை மீண்டும் நிலைநிறுத்தும்படியாய் பிதாவின் சித்தம் நிறைவேற்றி, சிலுவையில் மரணமடைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின் தம் சீஷருக்கு தம்மை வெளிப்படுத்திய போது - அங்கே அந்நேரத்தில் இல்லாத அவருடைய ஒரு சீஷன் தோமா, நான் அவரை கண்டு அவருடைய சிலுவை பாடுகளின் காயங்களை என் விரலால் தொட்டுப் பார்த்தாலொழிய நான் விசுவாசிக்க மாட்டேன் என்று சொன்ன போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே அங்கே அவர்கள் மத்தியில் வந்து நின்று சொன்ன வார்த்தையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். பரிசுத்த வேதத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தொட்ட ஒவ்வொருவரும், தேடிச்சென்று அவரை தொட்ட ஒவ்வொருவரும் அற்புதங்களை, பாவ மன்னிப்பை, நோயிலிருந்து, பிசாசின் பிடியிலிருந்து விடுதலையை பெற்று கொண்டார்கள். இதை விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை பார்ப்போம். அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டவர்கள்: அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். (மத்தேயு 14:35,36) அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். (மாற்கு 6:56) அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. (லூக்கா 8:43,44) கண்ணீரினால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாதம் தொட்டவர்கள்: அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். (லூக்கா 7:37,38) ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் தொடப்பட்டவர்களில் சிலர்: அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள். (மத்தேயு 20:30-34) மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். (லூக்கா 7:11-15) ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மிகவும் ஆச்சரியப்படுத்தி, அவரை தொட்ட ஒரு மனிதனை குறித்து பரிசுத்த வேதத்தின் இந்த பகுதி நமக்கு விளக்கிச் சொல்கிறது: லூக்கா 7: 2 - 9. இந்த சம்பவத்தின் முடிவில் ஆண்டவர் தாமே மிகுந்த ஆச்சரியத்தோடு சொன்ன வார்த்தையே கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனம்: இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 8:10) தேவனாகிய கர்த்தரை, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மிகவும் பிரியப்படுத்துவது : அவர் மீதான விசுவாசம். இன்றைக்கு நாமும் விசுவாசத்தினால் நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவை தொட்டுப்பார்க்க முடியும். அவரை பிரியப்படுத்த, அவர் இருதையத்தை சந்தோஷப்படுத்த முடியும். பரிசுத்த வேதம் அது எப்படி என விளக்கிச் சொல்கிறது: விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரெயர் 11:6) |
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |