IST (GMT+5.5)
  • Meditation
  • Let's Meditate
  • Messages - 2012
  • அன்பு இல்லாமல் தேவனை அறிந்து கொள்ள முடியாது
Logo_Tamil_big_235x235 இன்றைய தியானம்

அன்பு இல்லாமல் தேவனை அறிந்து கொள்ள முடியாது


"அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." (1 யோவான் 4:8)

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ள, நமக்கு அன்பு இன்றியமையாத தேவையாகும். மேற்கண்ட வேத வசனம் இதை கூறுகிறது.

மிக சமீபமாக இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கி இருக்கிற நமக்கு, ஆண்டவராகிய இயேசுவே சொன்ன அவருடைய வார்த்தை இப்படி சொல்கிறது.

அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். (மத்தேயு 24:12)

கர்த்தருடைய வருகையை நோக்கிய இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில், ஆண்டவர் சொன்னபடியே மேற்கண்ட வசனம் நம் கண் முன்னே நிறைவேறுவதை நாம் பல வழிகளில் காண்கிறோம். மனிதன் தன் சுபாவத்திலேயே அன்பை இழந்து விடுவான் என்பதைக் குறித்து வேதம் இப்படி எச்சரிக்கிறது:

மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள்.. சுபாவ அன்பில்லாதவர்களாயும்,.. (2 தீமோத்தேயு 3:1-3)

ஆனால், தேவ அன்பு நமக்குள் பரிசுத்த ஆவியானவரால் நம் இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கும் போது தேவ அன்பின் தன்மைகள் எப்படிப்பட்டது என்பதையும் வேதம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். (1 கொரிந்தியர் 13:4-7)

இந்த தேவ அன்பு நம்மை நிரப்ப தேவனிடத்தில் நாம் ஊக்கமாய் வேண்டிகொள்வோம். மிகுந்த கிருபையோடு தேவனாகிய கர்த்தர் நமக்கு சம்பூரனமாய் அருள் செய்வார்.

அப்பொழுது, தேவனிடத்தில் அவருடைய கற்பனைகளை கைகொண்டு அவரில் அன்பு கூறுவதும், நம்மை போல பிறரையும் நேசிப்பதும் சாத்தியமாகும். ஏனெனில், தேவ அன்பிலே நிறைந்து அந்த அன்பிலே நிலைத்திருக்கும் போது தேவனும் நம்மிலே நிலைத்திருக்கிறார்.

அன்பு ஒருக்காலும் ஒழியாது. ... (1 கொரிந்தியர் 13:8)

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16)

சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:19)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email